எஸ்.ரபீக், வேளச்சேரி பகுதிக்குழு உறுப்பினர், சிபிஎம் மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள பொது முடக்கத்தால் அனைத்து துறைகளிலும் பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. நோய்தடுப்பு நடவடிக்கை மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் ஆட்சியாளர்களின் நடவடிக்கை அமையவில்லை. ஒரு குடும்பத்திற்கு தினசரி செலவுக்கு 500 ரூபாய் தேவை உள்ள நிலையில், 5 ஊரடங்கு காலத்திற்கும் சேர்த்து தமிழக அரசு 1000 ரூபாய் மட்டுமே நிவாரணம் அளித்திருப்பது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. 5ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளித்திருந்தாலும் கட்டுமானம் போன்ற முறைசாரா தொழில்கள் நொடிந்துள்ளதால், பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த தொழில்கள் மீண்டெழ ஒருவருட காலம் ஆகும். முககவசம் மட்டும் கொரோனா தொற்றை தடுக்காது. மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்தால்தான், அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை தடுக்க முடியும்.
தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனைகளில் கொரோனா தொற்று இல்லாத பிற நோய்களுக்கான பரிசோதனை, சிகிச்சைகளை அளிக்க வேண்டும். தொடர் சிகிச்சை பெறுவோருக்கு சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டும். ஊரடங்கால் குழந்தைகளின் மனநிலையில் பெரும் மாற்றம் வந்துள்ளதை சரிசெய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு அறிவித்த இலவச ரேசன் பொருட்கள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. அதுவும் கூட ஒரு பகுதியினருக்கு கிடைக்கவில்லை. கேரளா போன்று வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்க வேண்டும். அரசு பணம் திரட்ட ஏராளமான வழியிருந்தும் டாஸ்மாக் கடைகளை திறப்பது மக்களை வதைக்கும் செயலாகும். சிறுகுறு, வீட்டுக்கடன் திருப்பிசெலுத்த 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது. மேலும், இந்த காலத்திற்கான அபராத வட்டி விதிப்பதை தடுக்க வேண்டும். ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேசன் மூலம் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.