tamilnadu

img

21 பொருட்களை இலவசமாக வழங்குக.. அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக வருமான வாய்ப்புகளை இழந்து துயரத்தின் பிடியில் சிக்கி நிற்கும் மக்களுக்கு பொதுவிநியோக முறை மூலமாக டிசம்பர் மாதம் வரை 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை இலவசமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு முன் வைத்துள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி விடுத்துள்ள செய்தி வருமாறு:

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 100 நாட்களைத்தாண்டி விட்டது. உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள்  வட்டிக்கு கடன் வாங்கி சமாளித்து வருகின்றனர். இச்சூழலில் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்.எனவே மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இந்த  கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் மத்திய மாநில அரசுகளை  அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. அதே நேரத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும்அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்து கிறது. கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக  அடுத்து வரும் நான்கு வாரம் ஒவ்வொரு வியாழக்கிழமையும்  போஸ்டர்கள் வெளியிட்டு ஆன்லைன் போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப் பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக
 ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பல மடங்கு  அதிகரித்து இருப்பது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் தமிழக பெண்கள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்   குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்ற தடுப்பு   பிரிவு  ஏடிஜிபி ரவி  மார்ச் 25 முதல் மே 31 வரை 13, 447- பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.  குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு  சம்பந்தமாக 372 வழக்குகள், போக்சோசட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக  அறிவித்துள்ளார். இன்னும் ஏராளமான  வழக்குகள் காவல்துறையின் கவனத்துக்கு வராமலேயே உள்ளன.  பாதிக்கப்படுபவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வழக்குப் பதிவு செய்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை முன்வரவேண்டும் .

21 பொருட்கள்
கடந்த 3 மாதகாலத்தில் 12 கோடிக்கு மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். ஏற்கனவே ஜூலை  மாதம் வரை ரேசன் கடைகள் மூலம் சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில், அரிசி ஆகிய 4 பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட் டது. மேலும் ஜூலை மாதம்  வரை தான் விலையில்லாத பொருட்கள் என தமிழக உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேற்கண்ட பொருட்கள் மட்டும் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இருக்காது. எனவே பருப்பு, கடுகு, மிளகு, சீரகம் ,புளி,வத்தல் உள்பட 21 வகையான அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட ஒரு தொகுப்பை இலவசமாக டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டும். ரேசன் கார்டு இல்லாத குடும்பங் களுக்கும் இலவச பொருட்கள் வழங்க வேண்டும்.

நுண் நிதி நிறுவனங்களின் கொடுமை
 தமிழகம் முழுவதும் பல நூற்றுக்கணக்கான நுண் நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை குழுக்கள் மூலம் பெண்களுக்கு கடன் கொடுத்து வட்டியுடன் வசூலித்து வருகின்றனர். குடும்ப செலவுகள், கல்வி, மருத்துவம், சுகாதாரம்,விவசாயம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக கடனை பெற்று வட்டியுடன் முறையாக பெண்கள் கட்டி வருகின்றனர். சமீபகாலமாக ஊரடங்கு காரணமாக வேலையிழந்து வருமானம் இல்லாத சூழ்நிலையில்   வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) ஆகஸ்ட் 31 வரை கடன் தவணையை வசூல் செய்யக்கூடாது வட்டியும் வசூல் செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  பல மாவட்ட ஆட்சித் தலைவர்களும்  இந்திய ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கக்கூடிய அறிவிப்புகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். இருந்த போதிலும்அடியாட்களை பயன்படுத்தியும், குழு தலைவர்களை பயன்படுத்தியும் இரவு 11 மணி வரை வீட்டில் உட்கார்ந்து  கடனை வசூல் செய்வதற்கு கடுமையான நடவடிக்கைகளை நுண் நிதி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். எனவே தமிழக அரசு கட்டாய வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு அதிகாரிகளை மாவட்டம்தோறும் நியமித்து நுண் நிதி நிறுவனங்கள் குறித்து வரும் புகார்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜனநாயக நெறிமுறைக்கெதிராக
தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக, சிஏஏவுக்கு எதிராக, கொரோனா காலத்தில் நிவாரணம் வேண்டுமென்ற கோரிக்கைகளுக்காக,  தொழிற்சங்கச் சட்டம் திருத்தப்படுவதற்கெதிராக, அத்தியாவசிய பொருட்கள் மீதான தடையை  நீக்கிய அவசர சட்டத்துக்கு எதிராக என ஏராளமான அரசின் மக்கள் விரோத அறிவிப்புகளை எதிர்த்துஜனநாயக ரீதியான போராட்டத்தை நடத்தும் போது பல மாவட்டங்களில் பலர் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும்  கைது செய்து சிறையில் அடைப்பதும் போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்டு சிறையில்  இருக்கக்கூடிய அனைத்துஅரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துஒவ்வொரு வாரம்  வியாழக்கிழமையும், போஸ்டர்கள் வெளியிட்டு  ஆன்லைன் போராட்டங்கள் மூலம் அரசுக்கு வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போராட்டத்தில் பெண் உரிமை, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஆதரவு தரும்படி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக  கேட்டுக்கொள்கிறோம்.
 

;