tamilnadu

img

மூடுவிழா அல்ல; திறப்பு விழா நடத்துவதே அரசுக்கு பெருமை!

ஆட்டையும், மாட்டையும் கையில் பிடித்துக் கொண்டு காடுகளில் திரிந்த சின்னஞ்சிறுசுகளிடம் ஏம்ப்பா நீ பள்ளிக்கூடம் போகலை..? என்று கேட்டதும் பள்ளிக்கூடம் போனா கஞ்சி கிடைக்குமா? என்று திருப்பி கேட்ட சிறுசுகளின் தேவை அறிந்து அதை பூர்த்தி செய்து கல்விக்கூடங் களை ஆயிரக்கணக்கில் தொடங்கி கல்வி வழங்கிய கல்விக் கடவுள் காமராஜர் வலம் வந்த மண்.அரசிடம் பொருளாதார வசதியோ கட்டமைப்பு வசதியோ மிகப்பெரிய அளவில் இல்லாத காலத்திலும் பள்ளிகளை திறம்பட நடத்தி, தரமான கல்வியும் வழங்கப்பட்டது.

அடுத்து வந்த அரசுகள் அதே அர்ப்பணிப்புஉணர்வுடன் பள்ளிகளை நடத்தவில்லை என்பதுதானே உண்மை. அதன் வெளிப்பாடு தான் தமிழகம் முழுவதும் 45 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாததால் அதை மூடிவிட்டு நூலகங்களாக நடத்த அரசு முடிவு செய்து இருக்கிறது.இதே நிலை நீடித்தால் இதேபோன்ற மூடுவிழாக்களை இன்னும் நிறையவே நடத்த வேண்டியிருக்கும்.பத்து ஆண்டுகளில் 15 ஆயிரம் பள்ளிகளை காமராஜரால் தொடங்க முடிந்து இருக்கிறது. அதன் பிறகு 50 ஆண்டுகளில் அந்த பள்ளிகளை கட்டமைக்கக் கூட நம்மால் முடியவில்லை ஏன்?அரசுப் பள்ளிகளை வளர்க்கக் காட்டிய அக்கறையை விட தனியார் பள்ளிகள் உருவாவதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டது அரசுகள்.பெரும் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் கல்வி தொழிற்சாலைகளை உருவாக்கி னார்கள். அவர்களை பொறுத்தவரை கல்வி என்பது அவர்களுக்கு ஒரு தொழில். அரசாங்கங்கள் என்ன செய்தது என்பதுதான் தற்போதைய கேள்வி.ஆங்கில கல்வி மோகம், தனியார் பள்ளிகளில் படித்தால்தான் தரமான கல்வி கிடைக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தான் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை போக வைத்தது. அதே நம்பிக்கை அரசு பள்ளிகள் மீதும் வந்திருக்க வேண்டும். அதற்கு அரசு என்ன செய்தது?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று மேல்தட்டு வர்க்கத்தினர் எல்லோரும் தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதையே விரும்புகிறார்கள்.

மாணவர்கள் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் எதற்கு? அதனால்தான் இந்த பள்ளிகளை மூட வேண்டியதாயிற்று என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இதேபோன்ற பள்ளிகள் வரும்.ஒவ்வொன்றாக மூடிக் கொண்டே போனால் கடைசியில் அரசுப் பள்ளிகளே இல்லாத நிலைதான் வரும்.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மய மாவதை நாம் விரும்பவில்லை. ஆனால் கல்வி தனியார்மயமாகி வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 எம்எல்ஏக்கள், 10 எம்பிக்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்கள்மனது வைத்து இருந்தால் அனைத்து பள்ளிகளையும் நட்சத்திர ஓட்டல்களை போல் மிகப்பிரம்மாண்டமாக கட்டமைத்து இருக்க முடியும்.

ஒரு தாசில்தார் தன் பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தது பரபரப்பாக பேசப்படும் நிலை வந்துள்ளது. எல்லோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிப்படிப்பு முழுவதும் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் மொழிக்காக போராட்டம் நடத்துகிறோம். ஆனால் தமிழ்வழி கல்வியில் படிக்க தயங்குகிறோம்.இந்த குறைகளை களைந்து அரசு பள்ளிகளை மேம்படுத்துவதை விட்டு விட்டு மூடுவிழா நடத்துவது சரியான முடிவாக இருக்காது. மொத்த பள்ளிகளையும் மூடுவதற்கான தொடக்கவிழாவாகத்தான் இருக்கும்.மிக கடுமையான முடிவுகளை எடுக்காவிட்டால் அரசு பள்ளிகளின் முடிவு மிக மோசமாக இருக்கும். இந்த மூடுவிழா இனிய விழா அல்ல. மிகக் கசப்பான நிகழ்வு.
நன்றி :  மாலை மலர் (19.7.2019) தலையங்கம்