செங்கல்பட்டு: 39 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 734ஆக உயர்ந்துள்ளது. 233 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் இறந்துள்ளனர். 494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
15 விழுக்காடு பேர் முககவசம் அணிவதில்லை
சென்னையில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 791 பேர் குணமடைந்துள்ளனர். 15 விழுக்காடு மக்கள் முககவசம் அணியாமல் உள்ளனர். ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் மண்டலங்களில் தொற்று தாக்கம் குறைந்து வருகிறது. 1970 குடிசை பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சவாலான பகுதிகளான ராயபுரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை கொரோனா தொற்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்
பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மூதாட்டி உயிரிழப்பு
சென்னை திரு.வி.க நகர் கேசி கார்டனைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
திருவள்ளூர்: டாஸ்மாக் கடைக்கு எதிராக 2 இடங்களில் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று (மே 23) மேலும் 76 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டனர். அத்திப்பட்டு பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 பேருக்கு நிபந்தனை ஜாமின்
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி கிருமிநாசினிகள் தயாரித்தவர்கள் கைது
சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் டெட்டால், லைசால், ஹார்பிக் போன்ற பெயர்களில் போலி கிருமி நாசினி தயாரித்து விற்று வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்
பல்லாவரம் அருகே பீகாரை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி 4 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இரண்டாவது முறையாக அந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிகிச்சையிலிருந்து ஒருவர் தப்பியோட்டம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அயனாவரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் வெள்ளியன்று (மே 22)இரவு தப்பியோடியுள்ளார். அவரை காவல்துறையினரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்: 13 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்து. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 262ஆக உயர்ந்துள்ளது. 150 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.