புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் போலீசார் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி.
டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொது இடங்கள், சாலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டின்போது கடலில் இறங்கி கொண்ட்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது.
கேளிக்கை விடுதிகள், காவல்துறையின் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது. அதை மீறி மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவர், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அவசர உதவி தேவைப்படுவோர் காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும்.
அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.