tamilnadu

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை

சென்னை, மே 20-தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கரும்பச்சை நிற கால் சட்டையும், இளம் பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சந்தன நிற கால் சட்டையும் சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவியருக்கு கூடுதலாக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன.