சென்னை, டிச. 11- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூரில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இங்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என்றும், கூடுதல் வகுப்பறைகள் தேவை என்றும் பொதுமக்களும், பெற்றோர்களும் மாமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மண்டல கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் வலியுறுத்தி வந்தார்.
இதையடுத்து சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்ய மண்டல அலுவலர் புருசோத்தமன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் அந்த பள்ளியில் புதனன்று (டிச. 11) ஆய்வு மேற்கொண்டனர். இதில் செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் சஞ்சிவீராவ், சிபிஎம் வடக்கு பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கட்டைய்யா கலந்துகொண்டனர்.