சென்னை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயருகிறது. பலி எண்ணிக்கையும் சற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 65 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இரண்டு மாற்றம்
தமிழக கொரோனா பாதிப்பில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 4,545 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 71,116 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் கொரோனா மையமாக இருந்த சென்னையில் கடந்த 4 நாட்களாக பரவல் வேகம் மிதமான வேகத்தில் குறைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 1,203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 71,220 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் எப்படி?
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,413 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 334 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் 253 பேருக்கும், திருவள்ளூரில் 217 பேருக்கும், நெல்லையில் 181 பேருக்கும், தூத்துக்குடியில் 144 பேருக்கும், ராணிப்பேட்டையில் 125 பேருக்கும், கன்னியாகுமரியில் 119 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும், தேனியில் 94 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.