tamilnadu

img

சேலம், தஞ்சையில் மினி டைடல் பூங்காக்கள் காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, செப். 23 - தொழிற்துறை சார்பில், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ரூ. 60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக் களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று  (செப்.23) காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். அத்துடன், சுற்றுச்சூழல், வனத்துறை,  கூட்டுறவுத் துறையில் புதிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ. 4.66 கோடியில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப் பொருள் சோதனைக்கூடம், ரூ. 17.04 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்கு வளாகங்களை காணொளி வழியாக திறந்து வைத்தார்.

மேலும், ரூ. 36.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ. 15.22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார். இதுதவிர, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 110 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வனப்பாது காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பேரில் 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

தொழிற்துறை சார்பில் தமிழகத்தில் சிறு நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகா, பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ. 30.50 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ஆணை கவுண்டன் பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் ரூ. 29.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களையும் காணொளி வழியாக திறந்து வைத்தார்.