நெல்லையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக தாக்குதலுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நெல்லையில் ஜாதி வெறியர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறை! திராவிடர் கழகம் கண்டனம்!
திருநெல்வேலியில் கடந்த 13.6.2024 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர், பாதுகாப்புக் கேட்டு, நேற்று (14.6.2024) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்பொழுது ஜாதி வெறியர்களான சிலர், அந்த அலுவலகத்திற்குள் புகுந்து, மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அலுவலகத்தில் இருந்த தோழர்களையும் தாக்கியுள்ள நிகழ்வு, மிகவும் கண்டனத்திற்குரியது என்பதோடு, தென்மாவட்டங்களில் பகிரங்கப்படுத்தப்படும் இந்த ஜாதி வெறிக் கொடுமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசின் முக்கிய கடமையாகும்!
சட்டப்படி நடைபெறும் கலப்புத் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. இது தொடர்ந்தால், அதுவே ஜாதிக் கலவரமாக மாறும் நிலை ஏற்பட்டு, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படவும் கூடும்.
எனவே, இந்த ஜாதி வெறியர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் அவசரம், அவசியம்!". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.