மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது . இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் ‘தி இந்து’ நாளேட்டின்’வாசக ஆசிரியராக’ இருந்தவருமான ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் திகழ்ந்தார். 'Dalits in Dravidian land' என்ற நூல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், போராட்டத்தையும், ஆதரவான இயக்கங்களையும் அவர் பதிவு செய்து, ஒரு பத்திரிகையாளர் என்பதையும் தாண்டி தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர். இடதுசாரி சிந்தனையாளராகவும் இருந்தவர். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.