சென்னை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழகஅரசு டெபாசிட் செய்தது. இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார் டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு: ஜெ.தீபா
ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளான ஜெ. தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் எதிர்ப்பை மீறி, போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இது முடிவு அல்ல, இனிதான் ஆரம்பம் என்று கூறி உள்ள தீபா, வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விடமாட்டேன் என்றும், சட்ட ரீதியாக மீட்டெடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார். வேதா இல்லத்தை விட்டுத் தரவேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. அவர் மரணம் எதிர்பாராதது, இல்லையென்றால் உயில் எழுதி வைத்திருப்பார் என்றும் தீபா கூறி உள்ளார்.