அவிநாசி, ஜூலை 10 – அவிநாசி பழைய பேருந்து நிலைய கட்டிடம் பழுதடைந்ததால் அதை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட பேரூராட்சி நிர் வாகம் தீர்மானித்துள்ளது. எனினும் இதற்குரிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்யாத நிலையில் அவசர, அவசரமாக கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசியில் புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில், கோவை சாலையில், அவிநாசி பழைய பேருந்து நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. எனினும் இந்த கட்டிடம் பலவீனமான நிலையில் இருந்ததாலும், கை காட்டி அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப் பட்டதாலும் இங்கிருந்து பழைய பேருந்து நிலையம் மாற்றப் பட்டுவிட்டது. பழைய பேருந்து நிலையத்துக்கு பின்புறம் 80க்கும் மேற்பட்ட கடைகளுடன் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் தினசரி மார்க் கெட்டில் உள்ள கடைகளையும் அப்புறப்படுத்த பேரூராட்சி நிர் வாகம் உத்தரவிட்டது. அங்கிருந்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய பேருந்து நிலையம் அருகில் தற்காலிகமாக தினசரி மார்க்கெட் அமைத்துக் கொடுக் கப்பட்டுள்ளது. வியாபாரிகளும் நிரந்தரமான தினசரி மார்க்கெட் கடை அமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பழைய பேருந்து நிலையக் கட்டிடத்தை இடித்து விட்டு மிகப்பெரிய வணிகவளாகம் கட்டுவதென்று பேரூராட்சி நிர் வாகம் தீர்மானித்துள்ளது வியப் பளிப்பதாக உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்தோர், முக்கிய பிரமுகர்கள் ஆதாயம் அடை வதற்காக இந்த வணிகவளாகம் கட்டத் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது. இது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரூபாய் ஐந்து கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்து ஆவணங்கள் மாநில அரசுக்கு அனுப்பப்பட் டுள்ளன. இதில் 80 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிகவளாகம் போன்றவை மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று தெரிவித்தார். அதேசமயம் தினசரி மார்க்கெட் மீண்டும் பழைய பேருந்து நிலையம் இடத்திற்கு மாற்றி வழங்கப் படுமாவென்று கேட்டபோது, இல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் தான் செயல்படும் எனத் தெரிவித்தார். நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன் பாகவே அவசரகதியில் பழைய பேருந்து நிலையம் இடிக்க காரணம் என்ன என்று கேட்ட போது? பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத் தக்கூடாது என்பதற்காக தற்போது இடித்து வருகிறோம். இடிப்பதற் காக மட்டும் நான்கு லட்சம் ரூபாய் பேரூராட்சி கட்டணம் கட்டப் பட்டதாகத்தெரிவித்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், அவிநாசி பொது மக்கள் நலன் கருதி பழைய பேருந்து நிலையமாக இருந்த இடத்தில் நீதிமன்றம் கட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. எதிர் காலத்தில் மாவட்ட நீதிமன்றம் ஆவதற்குக்கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்று கூறினார். மேலும் இது குறித்து வழக்க றிஞர்கள் சங்கம் நிர்வாகி வி.கே.சுப்பிரமணி கூறுகையில், இந்த இடத்தில் நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு திருப்பூர் மாவட்ட நீதிபதிக்கும், சென்னை உயர் நீதி மன்ற பதிவாளருக்கும் மனு அளித் துள்ளோம் என்றார். தினசரி மார்க்கெட் வியா பாரிகள் சிலர் கூறுகையில், தற் போது தினசரி மார்க்கெட் புதிய பேருந்து நிலையம் அருகில் தற் காலிகம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது, இது நிரந்தர மான இடம் இல்லை என்பது தெரி கிறது. இந்த இடத்திற்கு கீழ் மிகப்பெரிய சாக்கடை சென்று கொண்டிருக்கிறது. ஒரு கட்டத் திற்கு மேல் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் வியாபாரிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். வியாபாரி களுக்கு என்று நிரந்தரமான இடம் இல்லை. எனவே உரிய மாற்று இடம் நிரந்தரமான முறையில் வழங்க வேண்டும் என்றனர். மக்களுக்குப் பயன்படும் நீதித் துறைக்கும், தினசரி மார்க்கெட் வளாகம் அமைப்பதற்கும் தேவை இருக்கும்போது அதைப்பற்றி விவாதித்து பொதுநலன் கருதி முடிவு செய்ய வேண்டும். ஆனால் பேரூராட்சி நிர்வாகமோ முற்றிலும் வணிக நோக்கில் நகரின் மைய மான இடத்தில் வணிக வளாகம் கட்ட அவசரகதியில் முயற்சிப்பது யாரோ சிலரின் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவ தாகத் தெரிகிறது. குறிப்பாக தமிழக சபாநாயகர் தனபாலின் தொகுதியாக அவிநாசி இருக்கும் நிலையில், அரசும், பேரூராட்சி நிர்வாகமும் மக்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்க வேண்டும் என்று பொதுநல நோக்கர்கள் கூறு கின்றனர். அருண், அவிநாசி.