tamilnadu

img

தேர்வுப் பணியில் இருந்து இடைநிலை ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை

சென்னை, மார்ச் 1 - அரசு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் களாக நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை அப்பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வுகள் 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 2 அன்றும், 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 4 அன்றும், 10ஆம் வகுப்புக்கு மார்ச் 23 அன்றும் தொடங்குகிறது. பொதுத்தேர்வுகள் சுமார் 40 நாட்கள் நடைபெறுகிறது. பொதுதேர்வுகளின் போது அறை கண்காணிப்பாளர்களாக இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதனால் இடைநிலை ஆசிரியர்கள் கற்பித்தல் செய்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதாவது, 6,7, 8 வகுப்புகளுக்கு முப்பருவக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது. ஜனவரி - ஏப்ரல் வரை மூன்றாவது பருவ படம் கற்பித்தல் செய்ய வேண்டும். மார்ச் முதல் தேர்வு பணிக்கு சென்றால் இரண்டு மாத பாடத்திட்டத்தை முடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி 2018 ஆம்  ஆண்டு தேர்வுத்துறை இயக்குனரிடம் முறையிட்டோம். அதனடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலக்கு அளிக்க அறிவுறுத்தினார். ஆனால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், அதிகளவு முதுகலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் இருந்தும் இடைநிலை ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்களை கண்காணிப்பு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். தேர்வுத்துறை இயக்குனரும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.