tamilnadu

img

வேடந்தாங்கல் ஏரிக்குச் செல்லும் கால்வாயை தூர்வார கோரிக்கை

மதுராந்தகம், ஆக.28-  வேடந்தாங்கல் ஏரிக்குச் செல்லும் கால்வாயை, சீரமைத்துத் தூர்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சங்கத்தின் வட்டக்குழு உறுப்பினர் எஸ்.கோதண்டன் அனுப்பிய மனு வருமாறு:- வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்தைக் கொண்டுவரும் பிரதான வாய்க்கால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உத்திரமேரூர் ஏரியின் வடிகால் நீர் சித்தாத்தூர் ஏரிக்கும், வேடந்தாங்கல் ஏரிக்கும் செல்கிறது. இந்நிலையில் சித்தாத்தூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாய்க்காலின்  சுவர் இடிந்துள்ளது.  இது சரி செய்ய பொதுப்பணித்துறையிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏரிக்கு செல்ல வேண்டிய நீர் கால்வாய்கள் மூலம் வீணாகிறது.  மேலும் வேடந்தாங்கல் ஏரிக்கும் தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனவே  மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.