tamilnadu

img

விஷவாயு மரணங்கள் அதிகரிப்பு: மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவுகட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

ஆபத்தான வகையில் விஷவாயு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் மனித
கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் ஆபத்தான நடவடிக்கையை சட்டம்
தடை செய்துள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் இந்தச் செயல்
தொடர்வதுடன், தினந்தோறும் மரணச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த செவ்வாய் கிழமை, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார்
குடியிருப்பு வளாகத்தில் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 29
வயதேயான இளைஞர் திராவிட கதிரவன் விஷவாயு தாக்கி பலியானார்.
அவரோடு அந்தப் பணியில் ஈடுபட்ட முத்துக்குமார் என்பவரும் பாதிக்கப்பட்டு
சிகிச்சையில் உள்ளார். இன்று , மேற்கு தாம்பரம் பகுதியில்
வரதராஜபுரத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதில்
ஈடுபடுத்தப்பட்ட ராஜேஷ் (35), ஏழுமலை (35) இருவரும் உயிரிழந்துள்ளார்கள்.
சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற மரணங்கள்
தொடர்வதற்கு காரணமான தனிநபர்கள் மீதும், உள்ளாட்சித்துறை அதிகாரிகள்
மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்
என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் 35 வயதுக்கு
உட்பட்ட இளைஞர்கள் என்பது மேலும் துயரத்தினை அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன்,
குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கி அக்குடும்பத்தினரை
பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பினர் தரும் விபரங்களின் படி 2016 ஆம்
ஆண்டுக்கு பிறகு பதிவான இத்தகைய மரணங்களில் அதிகமான
எண்ணிக்கையில் (12) சென்னையில் தான் நடந்துள்ளன என்பது
அதிர்ச்சியளிப்பதாகும். மேலும், நாடு முழுவதும் நடக்கும் இத்தகைய
மரணங்களில் உத்திரப்பிரதேசத்திற்கு (52) அடுத்தபடியாக அதிகமான
எண்ணிக்கையில் தமிழ் நாட்டில்தான் (43) நடந்திருக்கிறது என்று சென்ற ஆண்டு
மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டதும் இத்துடன் குறிப்பிட்டு
சொல்லத்தக்கது.

எனவே, தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக செயல்பட்டு, விஷவாயு
மரணங்களுக்கும், மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறைக்கும் முற்றாக
முடிவுகட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.