சென்னை,அக்.9- தென்காசி,சிவகங்கை,திருப்பூரில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 9 அன்று திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் விசுவநாதப்பேரியில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி அவர்களுக்கும், சிவகங்கை மாவட்டம் இராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய் அவர்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் செலவில் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களுக்கு 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் உருவச் சிலை மற்றும் தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கம் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் மற்றும் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.