tamilnadu

img

சமூகப் போராளி எல்.இளைய பெருமாள் நினைவாக, நூற்றாண்டு அரங்கம்: சிபிஎம் வரவேற்பு!

சமூகப் போராளி எல்.இளைய பெருமாள் நினைவாக, நூற்றாண்டு அரங்கம், சிதம்பரத்தில் ஏற்படுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

சமூகப் போராளி எல்.இளைய பெருமாள் நினைவாக, நூற்றாண்டு அரங்கம், சிதம்பரத்தில் ஏற்படுத்தப்படும் என்ற தமிழ் நாடு அரசின் முடிவு பாராட்டி வரவேற்க வேண்டியதாகும்.

பள்ளி நாட்களிலேயே இரட்டைப் பானை முறையை எதிர்த்து போராடிய எல்.இளைய பெருமாள், தன் வாழ்நாள் முழுவதுமே சமூக விடுதலைக்காக தொடர்ந்து போராடியவர். 27 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர். இந்திய தீண்டாமை ஒழிப்பு குழுவின் முதல் தலைவர்.

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மேன்மைக்காக 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைவராக இருந்து, நாடு முழுவதும் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஆய்வு செய்து, கடும் போராட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

எல்.இளையபெருமாளின் வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து செயல்பட்டுள்ளார். சமூக சீர்திருத்தத்திற்காக இடைவிடாது பாடுபட்டார். சிதம்பரத்தில் செங்கொடி இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களிலும் பங்கேற்று ஆதரவளித்துள்ளார். அவருக்கு நூற்றாண்டு நினைவு அரங்கம் ஏற்படுத்துவது இளைய சமுதாயம், சமூக விடுதலைப் போராட்டங்களில் இணைத்துக் கொள்ள ஊக்கமளிக்கும். தமிழ் நாடு அரசின் அறிவிப்பை சி.பி.ஐ(எம்) சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.