சென்னை, ஜூன் 5 -மின்வாரியத்தில் காலியாக உள்ள சுமார் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றுமின்ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை திட்ட கிளை 15வது மாநாடு புதனன்று(ஜூன் 5) சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மின்நுகர்வோர் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ள நிலையில் ஊழியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஊதிய உயர்வு ஒப்பந்தப்படிநுகர்வோர் எண்ணிக்கை உயரும்போது புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதற்கு மாறாக நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த ஊழியர்களையும், ஓய்வுபெற்றவர்களையும் நியமிக்கப்படுவது ஒப்பந்தத்திற்கு எதிரானது.எனவே, வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களில், களப்பிரிவு பணிகளுக்கு 35 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் பிரிவு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக நிரப்ப வேண்டும். மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை பங்குகள் விற்பது அல்லது தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தமிழக அரசுப் பணியிடங்களில் பிற மாநிலத்தவர் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும், 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டிற்கு மத்திய சென்னை திட்டத் தலைவர் வி.சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஈ.ராஜசேகரன் கொடியேற்றினார். அண்ணாசாலை கோட்டச் செயலாளர் சி.லூயிஸ் வரவேற்க, தி.நகர் கோட்டத் தலைவர்ஆர்.தியாகராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாநாட்டை தொடங்கி வைத்து சென்னை வடக்கு மண்டலச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் பேசினார். வேலை அறிக்கையை செயலாளர் எஸ்.கண்ணனும், வரவுசெலவு அறிக்கையை எம்.செந்தில்குமாரும் சமர்ப்பித்தனர். அமைப்பின் பொருளாளர் எம்.வெங்கடேசன், துணைப்பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர், மாநிலச் செயலாளர் எம்.தயாளன், சென்னை தெற்கு-2ன் கிளைச் செயலாளர் டி.அன்பழகன், ஜிசிசி கிளைச்செயலாளர் எம்.முத்து, பொறியாளர் அமைப்புச் செயலாளர் ஆர்.ஆடலரசு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி கே.நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். அண்ணாசாலை கோட்டத் தலைவர் பி.ரவி நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
தலைவராக வி.சீனிவாசன், செயலாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக எஸ்.முருகவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.