ஐஐடி மாணவி பாத்திமாவின் செல்போனில் இருந்த தற்கொலை குறிப்பு உண்மையானது என்று தடயவியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. முதலில் விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் போலீசார் பாத்திமா லத்தீப் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். ஆனால் பாத்திமாவின் குடும்பத்தினர் உறுதியாக மறுப்பு தெரிவித்தனர். பாத்திமா லத்தீப் தனது மொபைலில் தற்கொலைக்கு ஐஐடியில் இணைபேராசியராக பணியாற்றும் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்றும், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பாத்திமா லத்தீப் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில் பாத்திமா பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த சைபர் கிரைம் பிரிவினர் தங்களது ஆய்வறிக்கையில் மாணவி பாத்திமாவின் தற்கொலைக் குறிப்பு, செல்போன் பதிவுகள் போலியானது அல்ல என்று தெரிவித்துள்ளது.