tamilnadu

img

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாவிடில் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் முற்றுகை... பெ.சண்முகம் எச்சரிக்கை

பொன்னேரி:
அமைதியான முறையில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வன்முறை களமானதற்கு பாஜக குண்டர்களும், மத்திய அரசும் தான் காரணம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார மசோதா 2020ஐ ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து குடியரசு தினமான ஜனவரி-26 அன்று கிருஷ்ணாபுரம் தனியார் கல்லூரி அருகிலிருந்து பொன் னேரி பழைய பேருந்து நிலையம் வரை டிராக்டர் பேரணி  நடத்தின. காவல்துறையினர் அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அனுமதித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கூட்டத்தினர் மத்தியில் பேசிய   தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம்கடந்த 62 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இதுவரை 11 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு மறுத்து வருகிறது. அரசின் இந்த பிடிவாத போக் கால் தான் போராட்டம் நீடிக்கிறது.வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.அதற்கான ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். ஜன. 29 ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் கூட வுள்ளது.  இந்த கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக் கையை மத்திய பாஜக அரசு எடுக்க வேண்டும்.இல்லையென்று சொன்னால் ஏற்கனவே விவசாயிகள் கூட்டமைப்பு எடுத்த முடிவின் படி பிப். 1 அன்று நாடாளுமன்றத்தை பல லட்சம் விவசாயிகள் முற்றுகையிடுவார்கள் என எச்சரித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.விஜயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், கட்டுமான சங்க எஸ்.கோபால், விக்னேஷ் உதயன், (தொமுச)  ஜெ.அருள் (ஏஐடியுசி)  ஜானகிராமன் (எல்டிசி) திருநாவுக்கரசு (ஏஐசிசிடியு)  ஆகியோர் பேசினர்.ஆர்.கே.பேட்டையில்  தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.பெருமாள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் நூற் றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விவசாயிகள் அணிவகுத்தனர்.

;