tamilnadu

img

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ‘கியூ.ஆர்' குறியீட்டுடன் அடையாள அட்டை

சென்னை:
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கியூ.ஆர். குறியீடுடன் புதிய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.தமிழக அரசின் அனைத்து துறைகளின் தலைமை அலுவலகங்களும் சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தான் இயங்கி வருகின்றன. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களும் இங்கு தான் உள்ளன.

தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே அரசால் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஊழியர்களின் புகைப் படத்துடன் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த நிலையில் ‘கியூ.ஆர்.’ குறியீடு கொண்ட பிரத்தியேக அடையாள அட்டை புதிதாக கொடுக்கப்பட உள்ளது. இந்த ‘கியூ.ஆர்.’ கோடில் ஸ்கேன் செய்தால் அந்த ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் தெரிந்துவிடும். இதற்காக ஊழியர்களை புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஏற்கனவே தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்த ஊழியர்கள் அழைக்கப்பட்டு தலைமைச் செயலகத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது.முதல் நாளில் 745 பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டாவது நாளில் 775 பேருக்கு எடுக்கப்பட்டது. இந்த பணி  இன்னும் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் 25 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. இதற் கான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.