சென்னை
சென்னை அருகே தாம்பரத்தைச் சேர்ந்த யேசு தயன் என்பவரின் ஏர்டெல் போஸ்ட் பெய்டு இணைப்பு கடந்த 2012ஆம்ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எனக்கு எந்த அறிவிப்பு தரவில்லை என்றும், மேலும் ஐசிஐசிஐ வங்கியில் தனது கணக்கில் இருந்து 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வேறு யாருக்கோ மாற்றப்பட்டதாகவும் காவல்துறையிடம் புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் யேசுதயன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த குறைதீர் ஆணையம், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏர்டெல் நிறுவன தரப்பில் சேவை குறைபாடு இருப்பதை உறுதிப்படுத்தியது.
அதனடிப்படையில், மனுதாரர் இழந்த தொகை 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை 9 சதவிகித வட்டியுடன் வழங்கவும், மன உளைச்சலுக்கான இழப்பீடாக 2 லட்சம் ரூபாயையும், வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயையும் மூன்று மாதங்களுக்குள் வழங்க ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.