tamilnadu

ஐசிஎப், பெரம்பூர் கேரேஜ், லோகோ பணிமனைகள் கோயம்பேடாக மாறும் அபாயம்: தொழிற்சங்கள் குற்றச்சாட்டு

சென்னை, மே 31- ஐசிஎப், பெரம்பூர் கேரேஜ், லோகோ பகுதி சென்னையின் மற்றும் ஒரு கோயம்பேடு “கிளஸ்டர்”ஆக மாறும் அபாயம் உள்ளதாக தட்சிண ரயில்வே எம்ளாயிஸ் யூனியன் (சிஐடியு) எச்சரித்துள்ளது. இதுகுறித்து செயல் தலைவர் அ.ஜானகிராமன், ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர்  பா.ராஜாராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 நாட்களில் கொரோனா தொற்று ஐசிஎப், பெரம்பூர் ரயில்வே வளாக பகுதியில் அதிகரித்து வருகிறது. ஐசிஎப் மருத்துவமனையில் 28ஆம் தேதி 25 நோயாளிகளும், அவர்களது தொடர்பால் தொற்றுக்குள்ளானவர்கள் என 50 பேர் உள்ளனர். பெரம்பூர் கேரேஜ், லோகோ, ஜிஎஸ்டி ஸ்டோர், ஜாயின்ட் ஆபீஸ், தெற்கு ரயில்வே ஜிஎம் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 70 பேர் மற்றும் தொடர்பு தொற்றுள்ள வர்கள் என மொத்தம் 120க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

தற்போது தெற்கு ரயில்வே நிர்வாக அலுவலகம், ஐசிஎப் நிர்வாக அலுவலகம், ஐசிஎப் டிசைன் அலுவலகம் உள்ளிட்டவை தொற்று பரவலால் 2 நாட்கள் மூடப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி பின்பற்றி வேலை செய்த அலுவலக ஊழியர்கள் மத்தியிலேயே நோய் பரவியுள்ளது என்றால் தனி மனித இடைவெளியுடன் பணி செய்ய வாய்ப்பில்லாமல் குழு, குழுவாக பணியாற்றும் பெரம்பூர் கேரேஜ், லோகோ ஒர்க்ஷாப்புகள் மற்றும் ஐசிஎப் பர்னிஷிங் 30 ஷாப், ஷெல் பி மெயின் அசெம்பிளி ஷாப்களில் கொரொனா பரவல் வேகம் எடுக்கத் துவங்கி விட்டது. கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் 300லிருந்து 600 பேர் குவியல் குவியலாக மதியம் கேட்டில் குவிந்து பர்னிஷிங்கில், எல்.எச்.பி-யில் சமூக இடை வெளியில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இதுவரை 15 நாட்களாக வேலை செய்துவந்த ஐசிஎப் தொழிலாளர்கள், சூப்பர்வைசர்கள் நோய் பரவும் என்ற அச்சத்தில் பீடிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் கேரேஜ், லோகோ பகுதியிலும் இதே நிலை உள்ளது. பெரம்பூர்  லோகோ தலைமை ஒர்க்ஸ் மேனேஜர் அருன் தேவராஜ், ஜூன் 1ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் அட்டடென்ஸ் முறை பின்பற்ற உத்தரவிட்டு கொரொனா பரவலை அதிகரிக்க வழி வகுக்கிறார். இது உடனடியாக நிறுத்த வேண்டும். ரெட் அலர்ட் கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதியான சென்னையில், தனிமனித இடைவெளியின்றி தொழிலாளர்கள் குவியலாக வேலை செய்யும் ஐசிஎப், பெரம்பூர் ரயில்வே கேரேஜ் லோகோ பகுதிகள், கோயம்பேடு போன்ற கிளஸ்டராக உருவாகும் அபாயம் உள்ளது.  எனவே, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது போல் நோய் தொற்று பரவல் தொடர் சங்கிலியை உடைக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசு அறிவிக்கும் ஊரடங்கு முடியும் வரை ஐசிஎப் தொழிற்சாலை, அலுவலகம், சதர்ன் ரயில்வே கேரேஜ், லோகோ தொழிற்சாலை, தெற்கு ரயில்வே ஜிஎம் அலுவலக வளாகம் ஆகியவற்றை மூடி வைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சை வசதிகளை உடனே மேம்படுத்த வேண்டும். பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை, ஐசிஎப் மருத்துவமனைகளை சார்ந்து ஐசிஎப் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், ஓய்வு பெற்றோர் 12 ஆயிரம் பேர், அவர்களது குடும்பத்தினர் என சுமார் 60 ஆயிரம் பேர் பேர் ஐசிஎப் மருத்துவமனையை சார்ந்துள்ளனர். படுக்கைகள் போதாமல் கெஸ்ட் ஹவுஸ் போன்ற புதிய இடங்களை ஏற்பாடு செய்து வருகிற நெருக்கடி நிலை உள்ளது.  பெரம்பூர் மருத்துவமனை சுற்றியுள்ள கேரேஜ், லோகோ தொழிற்சாலை, பனந்தோப்பு ரயில்வே காலனி, அயன்புரம் காலனி, ரயில்வே காலனி ஆகியவற்றில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் கேரேஜ் லோகோ-வில் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர், பொது மேலாளர் வளாகத்தில் பாதிக்கப்படுபவர்கள். சென்னை ஒப்பன் லைன் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையை சார்ந்துள்ளன.

 ஐசிஎப் மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் துவங்கியுள்ள பணி நியமன தேர்வு ஏற்பாடுகளை  இழுத்தடிக்காமல் போர்கால அடிப்படையில் உடனே முடித்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்ய வேண்டும்.   தென்னக  ரயில்வேயின் தலைமை மருத்துவமனையான பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள், நர்ஸ் உள்ளிட்ட மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெற்று 2 மாதங்களுக்கு மேலாகி தேவையற்ற காலதாமதம் ஏன்? அறிவித்த டாக்டர்கள் பாராமெடிக்கல் ஸ்டாப் நியமனம் செய்யாததால் கோவிட் 19 டெஸ்ட் செய்த நிரந்தர ஊழியர்கள் நோய் தாக்கம் ஏற்பட்டு பரிதவிக்கும் நிலை. அவர்களுக்கு குவாரென்டைன் வழங்க முடியாது 100 விழுக்காடு பெரம்பூர் மருத்துவமனை லேப் ஸ்டாப் வேலைக்கு வர வேண்டும் என கட்டாய படுத்தும் அவல நிலை.

அதிகாரிகள் கவன குறைவால் கொரோனா சிகிச்சை நெருக்கடி நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பெரும் நெருக்கடி ஐசிஎப் மற்றும் பெரம்பூர் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோயாளிகளை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கு தொற்று இருந்தால் கூட நீங்கள் வீட்டிலேயே தனித்து இருங்கள் என சொல்லி அனுப்புகின்றனர். நோயாளிகளை உயர் சிகிச்சைக்கு அனுப்ப தனி ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 மணி நேரமாக 108 ஆம்புலன்சுக்காக நோயாளியும் மருத்துவ ஊழியர்களும் காத்திருந்த அவலம் நடந்துள்ளது.  ஐசிஎப், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைகளுக்கு தனித்தனியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு மற்றும் உடனடியாக டாக்டர் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் உடனே பணியமர்த்த வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கும், உள் நோயாளிகளுக்கும் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது.

ஒரு நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு வெறும் 67 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ரயில்வே, ஐசிஎப் போன்ற மத்திய அரசு நிறுவனங்களின் ஊதிய நிலைக்கு சற்றும் பொருந்தாத ஒதுக்கீடு ஆகும். தற்போதைய விலை வாசி உயர்வுக்கு ஏற்ப உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். தற்போதைய உடனடி தேவையாக அருகில் உள்ள நல்ல ஹோட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நல்ல சத்தான உணவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில், டிரேட் சென்டர் போன்ற கோவிட் நோயாளிகளுக்கு பிரபல ஹோட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நல்ல சத்தான உணவுகளை வழங்கி வருவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் நிர்ணயித்துள்ள தரமான, சத்தான உணவு பட்டியல்படி ஐசிஎப், ரயில்வே மருத்துவமனையிலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்காக பொதுமேலாளர் ஸ்டாப் வெல்பேர் ஃபண்ட் அல்லது நெருக்கடி நிலை காலத்தின் சிறப்பு நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இரண்டு உயிரிப்பு போதும். ஓய்வு பெற்றவர்கள் 4 பேர் இறந்தாகக் கூறப்படுகிறது. எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் என்பதெல்லாம் ரகசியமாக வைக்கப்படுவது ஏன்? இதே நிலை தொடர்ந்தால் ரெயில்வே தொழிலாளர்கள் கொந்தளித்து போராடும் நிலை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.