tamilnadu

img

நானும் ஷாக்காயிட்டேன் மிஸ்டர் ஜி.ஆர். சுவாமிநாதன்- கே.கனகராஜ்

ஜஸ்டிஸ் சாமிநாதன் என்று தான் உங்களை அழைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு தகுதியான முறையில் உங்கள் பேச்சுக்கள் இல்லை. நீங்கள் குறிப்பிடும் பாரதிய சம்பிரதாயம் சொல்லும் பல விசயங்களை மறுதலித்துதான் இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு நீண்ட, நெடிய காலம் சாதாரண மக்கள் போராடி சிறை சென்று, செக்கிழுத்து அரசமைப்புச் சட்டம் உருவாக்கும் உரிமையை பெற்றார்கள். அதற்கு முன்பிருந்த பாரதிய சம்பிரதாயம் ஒன்றும் இந்தியாவிற்கு விடுதலையை கொண்டு வந்துவிடவில்லை. மாறாக, இந்திய விடுதலை போராட்டத்தில் ஒதுங்கி நின்ற உங்களால் கொண்டாடப்படுகிற பலரும் பாரதிய சம்பிரதாயம் என்பதை கொண்டாடியவர்களே.

இந்தியாவின் டெமோகிரஃபிக் புரோபைல் மாறிவிட்டால் அரசமைப்புச் சட்டம் இருக்காது என்று பேசியிருக்கிறீர்கள். இது தங்களின் திசைதிருப்பலே தவிர பாரதிய சம்பிரதாயத்திற்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பாரதிய சம்பிரதாயத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்ததாக சொல்லிக்கொள்ளும் கும்பல் மனுஸ்மிருதி இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டுமென்று இப்போதும் வலியுறுத்திருக் கொண்டிருக்கிறது. அந்த மனுஸ்மிருதி மனிதர்களில் ஒரு பகுதியை விலங்கினும் கீழாக நடத்தச் சொல்கிறது. பெண்களை சந்தேகத்தோடு பார்க்கச் சொல்கிறது. உரிமையற்றவர்களாக இருக்க வேண்டுமென்கிறது. அது உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். அதைத்தான் “நான் ஒரு நீதிபதி இதற்கு மேல் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். சொல்ல முடியாததல்ல, நீங்கள் சொல்லியதே அத்தனையும் வன்மம் நிறைந்த சாதிய ஒடுக்குமுறையை மீட்டூருவாக்கம் செய்யும் விருப்பம் தான்.

அடுத்ததாக, தமிழ் ஆர்வலர்கள் என்று கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள். பெரிய படிப்பறிவு இல்லாத காமராசர் தான் கல்விக் கண் திறந்த காமராசர் என்று போற்றப்படுகிறார். கல்வியில் ‘சிறந்த பலர் கல்வியே ஒரு பகுதியினருக்கு கொடுக்கக் கூடாது என்று சொன்னவர்களாகத்தான் இருந்தார்கள். இந்த ஒரு உதாரணம் போதும் என்று கருதுகிறேன்.

அடுத்ததாக, யாரோ ஒரு முன்னாள் அமைச்சரை குறிப்பிட்டு திராவிடக் குரலில் பேசினார் என்று மிமிக்கிரி செய்திருக்கிறீர்கள். நீங்கள் பேசும் முறைகூட தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் பேசுகிற வழக்கல்ல. தமிழ் கூட குமரி தமிழ், நெல்லை தமிழ், மதுரை தமிழ், கொங்கு தமிழ், சென்னை தமிழ் என்று பல்வேறு வழக்கில் பேசப்படுகிறது. ஒவ்வொருவரைப் பற்றியும் இப்படித்தான் பேசுவீர்களா?. மொழிகள் கூட பேசும் முறையில் பன்மைத்துவம் கொண்டதாகவே இருக்கிறது. நீங்கள் பேசுவது கூட புத்தகத் தமிழ் அல்ல. வீட்டு வழக்கைத்தான் அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறீர்கள்.

அடுத்ததாக, ஒரு அரசியல்வாதியை குறிப்பிட்டு அவருக்கு மகா பெரியவரை தெரியவில்லை என்றும், அவர் உங்கள் தாத்தவா என்று கேட்டதாகவும் பகடி செய்திருக்கிறீர்கள். இவராவது மனித உருவில் இருந்தவர். எங்கள் ஊர் தெய்வங்கள் பலவற்றை உங்கள் முன்கொண்டு வந்து வைத்தால் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?. நீங்கள் மகா பெரியவராக கொண்டாடும் ஒருவரை நான் வேறு விதமாக பார்க்கிறேன். இன்று ஒருவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலில் இருந்த சில பகுதிகளை பின்னூட்டத்தில் இணைத்திருக்கிறேன். இந்திய மக்கள் தொகையில் கணிசமான பகுதியாக இருக்கும் பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதற்கு அவர் செய்த மகா பிரயத்தனத்தை இங்கு இணைத்திருக்கிறேன்.

உண்மையில், திராவிட இயக்கத்தில் வந்த ஒருவருக்கு அவரை தெரியாமல் இருந்ததில் எனக்கொன்றும் வியப்பில்லை. உங்களுக்கு வியப்பாக இருந்தது இன்னொருவருக்கு இயல்பானதாக தோன்றும். உங்களுக்கு இயல்பாக தோன்றும் ஒன்று, இன்னொருவருக்கு வியப்பாக தோன்றும். மனிதர்களைப் பற்றிய புரிதல் இருக்கும் எவருக்கும் இது தெரியும். இது, தங்களுக்கு ‘தெரியாமல் இருந்ததை அறிந்து நானும் ஷாக்காயிட்டேன்.

 

கே.கனகராஜ், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்

முகநூல் பதிவிலிருந்து..