tamilnadu

img

இந்தித் திணிப்பே கலாச்சாரத் திணிப்புதான்: திருமாவளவன்

சென்னை:
தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் ஆகியோர் ஞாயிறன்று (ஜூன் 2) சென்னை அசோக் நகரிலுள்ள அம்பேத்கர் திடலில் விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமா வளவனைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மோடி அரசின் நோக்கம் ஒட்டுமொத்த இந்தி யாவையும் இந்தி மயமாக்குவது, இந்து மயமாக்குவதுதான். அந்த முயற்சிக்கு இடம்கொடுக்காத ஒரே மாநிலம் தமிழகம். கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சி யாகத் தமிழகத்தையும், அதன் தனித்துவத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் தமிழக மக்கள் போராடி வருகிறோம். அதனால்தான் மோடி கும்பலால் இங்கு வெற்றிபெற முடியவில்லை. 

ஒருபுறம் கலாச்சார ரீதியாக நம் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். மறுபுறம், கல்வித்தள த்தில் இந்தியை, சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிப்பதன் மூலம் நம் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடம்கொடுக்காத போர்க்குணம் கொண்ட இனமாக தமிழ் தேசிய இனம் இருந்து வருகிறது. ஒட்டு மொத்த இந்தியாவில் வடஇந்தியமாநிலங்களில் மிக இலகுவாக பாஜக பெற்றாலும் தமிழகத்தில் அவர்களது ஜம்பம் எடுபடவில்லை” என்றார்.இந்தித் திணிப்பு முயற்சி எந்த 
வடிவில் வந்தாலும் அதை அனுமதி யோம். திமுக கூட்டணியைச் சார்ந்த 37 பேரும் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல; 37 பேரும் போராளிகள் என்பதை மோடி அரசு விரைவில் உணரும். தமிழகத்தின் மீது எந்த வடிவத்தில் இந்தியைத் திணிக்க முயற்சி செய்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழியாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்தித் திணிப்பு என்பதே கலாச்சாரத் திணிப்புதான்” என்றும் திருமா வளவன் தெரிவித்தார்.