சென்னை, ஆக. 21 - கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்கா ளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு நான்கு வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி ஏற்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
“கல்வராயன் மலைப்பகுதியில் 132 கிராமங்கள் உள்ளன. ஆனால் அங்குள்ள ஒரே ஒரு மாணவர் மட்டும் சட்டப்படிப்பு படித்து வருகிறார் என்றால் அரசின் செயல் பாட்டை எப்படிப் பார்ப்பது? அனைவருக்கும் கல்வி உரிமை கிடைக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களைத் தொடர்ந்து, கள்ளச் சாராய உற்பத்தி மையமாக கருதப்படும் கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை நீதிபதி கள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு புதனன்று விசாரணை நடத்தியது. அப்போது இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.
முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றத் துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, “கல்வராயன் மலைப்பகுதியில் தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன; அரசு நடவடிக்கை எடுக்கிறது, அரசின் கையில் மந்திரக்கோல் இல்லை, ஒரே இரவில் எல்லாம் முடிந்து விடாது, பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் வசதிக்காக இரு மினி பஸ்கள் இயக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடு தல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், இப்பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், மலைவாழ் மக்கள் மீது எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யக் கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.