சென்னை, ஜூன் 13- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உடனடி அபராதம் வசூலிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.