tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 50 மையங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

தொழிற்சங்க உரிமைக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்து தர வேண்டும், பெரும்பான்மை சங்கத்தோடு நிர்வாகம் பேச வேண்டும் என வலியுறுத்தி செப்.9 ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக செவ்வாயன்று (அக்.1) தமிழ்நாடு முழுவதும் சிஐடியு சார்பில் மறியல் நடைபெற்றது.

சாம்சங் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நந்தனம் நிதித்துறை வளாகத்தில் உள்ள வணிகவரி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.டேனியல் ஜயசிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் கூறுகையில், மாநிலம் முழுவதும் 50 அரசு அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்றார்.