சென்னை,ஆக.29- திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றுக்கு சர்வதேச அளவிலான வர்த்தக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. நகரம், வட்டாரம் என ஒரு குறிப்பிட்ட புவிபரப்பு சார்ந்து புகழ்பெற்று விளங்கும் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வமாக குறிப்பது புவிசார் குறியீடு ஆகும். புவிசார் குறியீட்டிற்கான சட்டம் இந்தியாவில் 2003-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. குறிப்பிட்ட இடத்தில் தயாரிக்கப்படும் அல்லது விளைவிக்கப்படும் பொருள் தனிச் சிறப்பு பெற்றிருந்தால் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டபொருளை தொடர்புடைய ஊரைத் தவிர மற்ற இடங்களில், அதே பெயரில் தயாரித்து சந்தைப்படுத்த முயன்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் ஓவியங்கள், தலையாட்டி பொம்மை, மதுரை மல்லி, சேலம் மாம்பழம், திருப்பதி லட்டு, பத்தமடை பாய், பவானி ஜமுக்காளம், கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் பூட்டுகள் தொடக்கத்தில் சங்கரலிங்க ஆசாரி என்பவரால் அழகிய வடிவமைப்புடனும் நீண்ட நாட்கள் உழைக்கும் வலிமையுடனும் தயாரிக்கப்பட்டன. அவரிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி தொழிலை மேற்கொள்ளத் தொடங்கினர். கடந்த 2013 ஆம் ஆண்டு பூட்டு தொழிலாளர் சங்கத்தால் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போதுதான் இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கண்டாங்கி என்பது பழமை வாய்ந்த ஒருவகை பட்டு நூலால் நெய்யப்படும் தனித்துவம் வாய்ந்த சேலையாகும். இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் இருக்கும் கண்டாங்கி ரகச் சேலைகள் காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்தவை. 200 ஆண்டுகாலமாக காரைக்குடி பகுதி கைத்தறி நெசவாளர்கள் கை வண்ணத்தில் உருவாகும் கண்டாங்கி சேலைகள் பிற மாநிலங்களிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. புவிசார் குறியீடு கோரி காரைக்குடி பகுதி நெசவாளர் சங்கத்தினர் விண்ணப்பித்திருந்தனர்.இந்நிலையில் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.