tamilnadu

img

பாட்டாளி மக்கள் இயக்குனர் எஸ்.பி ஜனநாதனுக்கு முழு உருவ சிலை திறப்பு!

திரையில் சர்வதேச அரசியல், பொருளாதாரம் பேசிய இடதுசாரி இயக்குனர் பாட்டாளி மக்கள் இயக்குனர் எஸ்.பி .ஜனநாதனுக்கு நடிகர் விஜய் சேதுபதி முன்னெடுப்பில் முழு உருவ சிலை திறக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தன்னுடைய படைப்பில் மூலம் சர்வதேசிய அரசியல், பொருளாதாரம், இடதுசாரி கருத்துகள் பேசிய எஸ்.பி ஜனநாதன், இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, லாபம் போன்ற படங்கள் மூலம் சமுதாய கருத்துக்களை பேசினார். மக்களிடையே ஒரு விவாதத்தை  ஏற்படுத்தினார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 14-ஆம் தேதி உடல்நலக்குறைவால் இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் காலமானார்.

இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதியின் முன்னெடுப்பில் எஸ்.பி ஜனநாதனுக்கு முழு உருவ உலோக சிலை, படத்திறப்பு மற்றும் நினைவு மலர் வெளியீடு, புகழ்வணக்க நிகழ்வு இன்று அடையாறு, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. எஸ்.பி ஜனநாதனின் முழு உருவ சிலையை, சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஐ தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.