tamilnadu

img

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தகவல்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். 
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை காலை  இரண்டாவது டவரின் பின்புறமுள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், எத்தனை நோயாளிகள் உள்ளே மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
தீ விபத்தால் கரும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நடந்துள்ள பகுதியில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில்  சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
பொதுமக்கள் தீ விபத்து நடந்துள்ள பகுதியில் கூட்டம் கூடாமல் இருந்தால் தீயணைப்பு துறையினருக்கு பணி செய்ய உதவியாக இருக்கும் என்று செயலாளர் ராதா கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது வரை தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
தொடர்ச்சியாக தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன்  தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.