சென்னை, மே 14-புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் உடல் நலக்குறைவால் சென்னையில் செவ்வாயன்று (மே14) மரணமடைந்தார். அவருக்கு வயது 60. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த இவர் பி.எஸ்சி.பி.எல். படித்தவர். புதுக் கோட்டை மக்களவைத் தொகுதியாக இருந்த போது அத்தொகுதியில் 1999 முதல் 2000 வரை 11 மாதம் மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி-யாக பதவி வகித்து வந்தார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தார். அதன் பின்னர் திமுக-வில் இணைந்தார். மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தீபா அணியில் இணைந்தார்.கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான நெடுவாசலில் புதன்கிழமை(மே15) அடக்கம் செய்யப் படுகிறது. இதற்காக அவரது உடல் சென்னையிலிருந்து நெடுவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ராஜா பரமசிவத்துக்கு சுசிலா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.