எழுத்தாளரும், சுதந்திரச் சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும் பெண்ணியவாதியுமான பிரான்சிஸ் ரைட், 1795 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அமெரிக்காவின் அடிமைத்தனத்தை எதிர்த்தும், பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
1820-களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தம் பற்றி வெளிப்படையாகப் பேசிய அமெரிக்கப் பெண்களில் இவரும் ஒருவர். அமெரிக்க அடிமைத்தனத்தின் அநீதிகளில் அதிக கவனம் செலுத்திய ரைட், விடுதலைக்கான வழிமுறைகளை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கினார். குறிப்பாக, பிறப்பு கட்டுப்பாடு மற்றும் எளிமையாக்கப்பட்ட விவாகரத்து சட்டங்கள் மீது கவனம் செலுத்தினார். இதனால் நியூயார்க் நகரில் நல்ல வரவேற்பைப் பெற்ற ரைட், அங்கு இடம்பெயர்ந்து, அன்றைய முற்போக்கு தொழிலாளி வர்க்க அரசியலில் முன்னணி நபராகத் திகழ்ந்தார்.
இவர், 1825 இல் அமெரிக்காவிலிருந்த அடிமைகளை மீட்டு, தனது சொத்திலிருந்து 640 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக வழங்கி, சுதந்திரம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்து, அங்கே குடியமர்த்தினார். அமெரிக்காவின் மேற்கு டென்னசி பகுதியில் உள்ள இவ்விடத்தை ரைட், ‘நஷோபா’ என அழைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்பகுதி காலனி ஆதிக்கத்திற்கு வந்தது. அதிலிருந்து அது மீளவே இல்லை.
ரைட்டின் யோசனைகள் மற்றும் அவற்றை வெளிப்படுத்துவதில் இருந்த தைரியம், பல எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் 1852 இல் டிசம்பர் 13 அன்று மறைந்தார்.