tamilnadu

img

தோழர் கே.வடிவேல் மறைவுக்கு சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்...

சென்னை:
நாதன் திருவாசல் தோழர் கே. வடிவேல் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில செயற்குழு சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், காரப்பிடாகை தெற்கு ஊராட்சிமன்ற தலைவராக 1957முதல் 2001 வரை தொடர்ந்து 44 ஆண்டுகள் பணியாற்றியவருமான நாதன்திருவாசல் தோழர் கே.வடிவேல்(92) உடல்நலக்குறைவால் 17-10-2020 அன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், விவசாயிகள் சங்கத்திலும் சேர்ந்து பணியாற்றி ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அயராது பாடுபட்டவர். குறிப்பாக, 1962ல் நிலஉச்சரவம்பு  சட்டதிருத்தம் கோரி நடைபெற்ற மாநிலந்தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு 3 மாத காலம் சிறைவாசம், வேட்டைக்காரன் குடியிருப்பு தேனீர் கடைகளில் பின்பற்றப்பட்ட இரட்டைக்குவளை முறையைஒழிப்பதற்காக நடைபெற்ற போராட்டம், வானவன் மகாதேவி கிராமத்தில்ஆக்கிரமிக்கப்பட்ட தலித் மக்களுக்கான நிலத்தை மீட்டு கொடுப்பதற்கான போராட்டம், கோவில்பத்து ஆலயநுழைவு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் தோழர் கே.வடிவேல்.அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நாகப்பட்டினம்  மாவட்ட தோழர்களுக்கும்  மற்றும் உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் கட்சி தோழர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.