பீடிதொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பீடி தொழிலாளர்சங்கம் வரவேற்பு
திருவள்ளூர், டிச. 11- மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பீடி தொழிலாளர்களுக்கு மாவட்ட துணை ஆட்சியர் இலவச குடிமனை பட்டா வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட திருக்கண்டலம் கிராமத்தில் புதனன்று (டிச 11), மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மெய்யூர் கிராமத்தைச் சார்ந்த பீடி சுற்றும் 40 தொழிலாளர்களுக்கு இலவச குடிமனை பட்டாவை மாவட்ட துணை ஆட்சியர் கணேஷ் வழங்கினார். இதில் திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதன், மணிகண்டன், ஆய்வாளர், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மதன், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கை மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நீண்ட காலமாக இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் முதற்கட்டமாக 40 தொழிலாளர்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கியுள்ளதை சங்கத்தின் கவுரவ தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட நிர்வாகிகள் டி.ஆர்.பலராமன், கே.முருகன், டி.டில்லி, வட்டச் செயலாளர் கோ.விஜயகுமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
விடுபட்டவர்களுக்கும் பட்டா வழங்குக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை, பூண்டி, எல்லாபுரம் ஆகிய பகுதிகளில் விடுபட்டுள்ள 130 பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு குடிமனை பட்டா இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் விரைவில் இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும் என சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு
சக்தி மசாலா நிறுவனத்திற்கு விருது
சென்னை, டிச. 11- மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கியதற்காக 2024-ம் ஆண்டுக்கான ஹெலன் கெல்லர் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா, புதுடெ்ல்லி, அரசியலமைப்புச் சட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் தேசிய மையத்தின் தலைவர் பிரதீப் குப்தா ஆகியோர் இணைந்து விருதினை வழங்கினர்.
சக்தி மசாலா நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் முனைவர் பி.சி. துரைசாமி இதனைப் பெற்றுக்கொண்டார்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
அம்பத்தூர், டிச. 11- சென்னை கொளத்தூர் புத்தகரம், திருவள்ளுவர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (33). இவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல திரைப்பட நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் அருண்குமார் புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். அம்பத்தூர் அருகே கொரட்டூர் வாட்டர் கேனால் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே அதிவேகமாக வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மேல்நதுங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (49) என்பவர் கைது செய்யப்பட்டார்.