தவறான சிகிச்சையால், கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17 வயது), சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் படித்து வந்தார். கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சையிலிருந்த பிரியா, இன்று காலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.