இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 பேருக்கு பணி ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்.
தமிழ்நாட்டில் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' ஆகலாம் என்ற உத்தரவு கடந்த 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு பல்வேறு தடைகள் எழுந்தன. இந்த நிலையில் கேரளத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பெண் அர்ச்சகர் நியமனங்கள் சாத்தியமாகின. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, 3 பெண்கள் அர்ச்சகர் கல்வியை முடித்து பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 15 பெண்கள் அர்ச்சகர் படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 பேருக்கு பணி ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார். மேலும், காலியாக உள்ள மேலும் 73 ஓதுவார் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.