பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்று ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் வலியுறுத்தி உள்ளார்.
பாத்திமாவின் தந்தை லத்தீப் இன்று மகள் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி டிஜிபி திரிபாதியிடம் மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த லத்தீப் ஐஐடியில் சேர்ந்த சில மாதங்களில் எனது மகள் பாத்திமா உயிரிழந்துள்ளார். எனது மகள் எப்போது எந்த காரியத்தையும் கடிதமாக எழுதி வைப்பது வழக்கம். அதேபோல் தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ளார். ஆனால் எப்ஐஆரில் இதை குறிப்பிடவில்லை. தனது இறப்புக்கு காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என குற்றம் சாட்டி உள்ளார். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் பாத்திமாவிற்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார்.
பாத்திமா தனக்கு துன்புறுத்தல் கொடுப்பதாக என்னிடம் பேசுவார். எனது மகள் நன்றாக படிக்கக்கூடியவர். எல்லா பாடங்களிலும் முதலிடத்தில் இருந்தார். நவம்பர் 8ல் இரவு ஒரு மணி நேரம் ஐஐடி கேண்டீனில் உட்கார்ந்து அழுதிருக்கிறார். எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் வந்து பார்த்தபோது அறையில் கயிறு இல்லை. அந்த அறைக்கு சீல் வைக்கவும் இல்லை. பாத்திமா உயிரிழந்த பின்னர் அறையிலிருந்து பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இதைப்பார்க்கும்போது பாத்திமா மரணம் தற்கொலை போல் தெரியவில்லை. பாத்திமா மரணத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற டிஜிபி உறுதியளித்துள்ளார். மேலும் பாத்திமாவின் மொபைலை எங்கள் முன்தான் ஆய்வு செய்யவேண்டும். இதில் தமிழக அரசு மற்றும் டிஜிபி மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.