tamilnadu

img

வேகமாக பரவும் கொரோனா... தமிழகம் முழுவதும் 1,40,716 பேரே சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்....

சென்னை

தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரடங்கு ஞாயிறு நள்ளிரவு நிறைவடைந்த நிலையில் மொத்த மக்கள் தொகையில் 1,40,716 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடைபெற்றுள்ளது. சாம்பிள்கள் என எடுத்துக்கொண்டால் 1,50,107 சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அதன் வீரியத்தை காட்டத் தொடங்கிவிட்டது. சென்னையில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது. மாநிலம் முழுவதும் ஞாயிறன்று தொற்றால் பாதிக்கப்பட்டோர் 266. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது.  குறிப்பாக சென்னையில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை1,458 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 10,617 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. மொத்த சாம்பிள்கள் சோதனை 1,50,107. நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் 1,40,716 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

45 இடங்களில் தொற்று ஆய்வகங்கள் உள்ளன. வீட்டுக் கண்காணிப்பில் 37,206 பேர் உள்ளனர்.  கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 40 பேர் உள்ளனர். 38 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,379 பேர் குணமடைந்துள்ளனர். வீடு திரும்பியவர்கள் தவிர 1,611 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை  30 ஆக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக  சென்னையில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. கடலூரில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. கோயம்புத்தூரில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், மதுரை, தென்காசி, திருவள்ளூரில் தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலையில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்கள் 170 பேர். இதில் பெண்கள் 88 பேர். ஆண்கள் 82 பேர். 13 வயது முதல் 60 வரையில் பாதிக்கப்பட்டவர்கள் 2,564 பேர். பெண்கள் 1,732 பேர். ஆண்கள் 831 பேர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 289 பேர். பெண்கள் 195 பேர். ஆண்கள் 94 பேர். குறிப்பாக சென்னையில் கோயம்பேடு சந்தை ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;