சென்னை:
ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும். அரசாணை 12 (பள்ளிக்கல்வித் துறை நாள் 30/1/2020) இன் படி நியமன வயது 40-க்குள் இருக்க வேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் விடுத்துள்ள அறிக்கை:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் இரண்டு தாள்கள் அடங்கும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களாகவும், 2-வது தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகவும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் வரைதான் செல்லும்.இந்நிலையில் தேசிய ஆசிரியர் கவுன்சிலின் (என்.சி.டி.இ) 50 வது பொதுக்குழு கூட்டத்தில், ஆசிரியர் தகுதிச் சான்றிதழை ஆயுட்காலமாக நீட்டிப்பது, இது வருங்காலங்களில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும், ஏற்கனவே தேர் வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆயுட்காலச் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில், ஏற்கெனவே டெட் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும். அரசாணை 12 (பள்ளிக்கல்வித் துறை நாள் 30/ 1 /2020)ன் படி நியமன வயது 40-க்குள் இருக்க வேண்டும் என்பதை திரும்பப்பெற வேண்டும். பழைய முறைப்படி ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கான உச்ச வரம்பு வயது 58 என அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.