சென்னை:
விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமான விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட்டு, காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதைவழியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டத்தின் மூலம் நீர் கொண்டு செல்லும் திட்டத்திற்காக சங்ககிரி, எடப்பாடி,ஓமலூர் மற்றும் மேட்டூர் வட்டங்களுக்கு உட்பட்ட 33 கிராமங்களில் சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலங்களைகையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித் துள்ளது.
2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்து வதாகவும் 2017 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு பெறுவதற்கான தமிழக அரசின் விதிகள் அடிப்படையில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தில், திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வேறு மாற்று நிலம் இல்லையென்றால் மட்டுமே விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அத்தியாயம் II பிரிவு 4.4(E).மேற்படி திட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான் அரசின் நோக்கமென்றால் ஏற்கனவே உள்ள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழிப்பாதை வழியாக குழாய் மூலமும், திறந்தவெளி கால்வாய் மூலமும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமான நிலம் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கும் வகையில் செயல்பட வேண்டிய அவசியமில்லை. நிலத்தை இழக்கும் விவசாயிகளில் 99 சதவீதம் சிறு-குறு விவசாயிகள். இந்த நிலத்தை தவிர வேறு வாழ்வாதாரமே இல்லாதவர்கள். அரசு கொடுக்கும் சொற்பமான இழப்பீட்டு தொகை மூலம் அவர்களால் வேறு நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடியாது. புதிய வீடுகளை கட்டிக்கொள்ள முடியாது. வாழவழியின்றி வேறுவிதமான துயரமான முடிவுகளைத்தான் மேற்கொள்ளப் போகிறோம் என்று விவசாயிகளை நேரில்சந்தித்த போது என்னிடத்தில் தெரி வித்தார்கள். நிலத்தை கொடுக்க விவசாயிகள் தங்கள் விருப்பமின்மையை தெரிவித்த பிறகும் கூட அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் மிரட்டுவது, அச்சுறுத்துவது அல்லது பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது ஆகும்.
திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களடங்கிய திட்ட அறிக்கையே பகிரங்கமாக அரசு வெளியிடாமல் மறைத்துவெளிப்படைத்தன்மை இன்றி செயல்படுவது பலவிதமான சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுக்கிறது. எனவே, தமிழக அரசு, காவிரி - சரபங்கா நீரேற்று திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதால் ஏற்படும்சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வை அரசுமேற்கொள்ளவில்லை. மேலும் இத்திட்டத் தால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும்எவ்விதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அவசர கோலத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ளவிருப்பது சட்டத்திற்கு விரோத மானதாகும்.
விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்துவதை கைவிட்டு மாற்றுவழியில் நீர்வழிப்பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அதிகாரிகள், விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் அத்துமீறி அளவீடு செய்வது, முட்டுக்கல்போடுவது, மிரட்டுவது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட தாங்கள் அறிவுறுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இப்பிரச்சனை தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சி தலைவரிடம் விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் ஆர்.ராமமூர்த்தி நேரில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் இம்மனுவினை தங்களுக்கு அனுப்பியுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்திற்கு விரோதமாக அரசு நடந்து கொள்ளக் கூடாது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்கும் வகையில் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடிதத்தின் நகல் பொதுப்பணித்துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.