tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய பைக்: மாணவர் படுகாயம்

சென்னை, மார்ச் 31- ஆளுநர் ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சி சென்றுவிட்டு ஞாயிறன்று  (மார்ச் 30) இரவு 9 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தார். முன்னதாக ஆளுநர் ரவியை அழைத்துச் செல்ல சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து பாதுகாப்பு வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்னை விமான நிலையம் விஐபி கேட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தன. இரவு சுமார் 8 மணி அளவில் பாதுகாப்பு வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து விமான நிலையத்தின் விஐபி கேட் செல்வதற்கு வலது பக்கம் திரும்பிய போது பல்லாவரம் பகுதியில் இருந்து கிண்டி நோக்கி ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக வந்துள்ளார். ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் திரும்புவதற்காக சிக்னல் போட்ட பின்பும் அந்த இளைஞர் சாலை விதிகளை மீறி அதிவேகமாக சென்று காவல் அதிகாரிகள் வாகனத்தின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். மேலும், இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இரு சக்கர வாகனத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தி காயமடைந்த நபர் பரங்கிமலை பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24), என்பதும் இவர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.மேலும், சந்தோஷுக்கு கை, கால், முகம், காது, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால் குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சந்தோஷ் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாஞ்சா நூல் விற்பனை;  போலீஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை, மார்ச் 31- திருவொற்றியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 187 காற்றாடிகள் மற்றும் 72 மாஞ்சா நூல் கண்டு கள் மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. காலடிப்பேட்டை வஉசி 1வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தடை செய்யப்பட்ட காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் அதை தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அருண் குமார் என்பவரை கைது செய்தனர்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை  புதிய பாடத்திட்டம்: சிபிஎஸ்இ தகவல்

சென்னை, மார்ச் 31- சி.பி.எஸ்.இ. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடை முறை கள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இந்த புதிய பாடத்திட்டம் வழங்கு கிறது. ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடை பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவக் கற்றல், திறன் சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டங்களை https://cbseacademic.nic.in/curriculum-2026.html என்ற பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

50 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க சென்னை ஐசிஎப் ஆலை திட்டம்

சென்னை ஐ.சி.எப் ஆலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எப் ஆலையில் தற்போதுவரை பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு வந்தே பாரத் ரயில் தயாரிப்பு நடந்து வரு கிறது. தெற்கு ரயில்வேயில் 8 வழித்தடங்  கள் உட்பட இதுவரை 75-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படு கின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதி கொண்டவை. இதனால், பகலில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதற்கிடையில், தூங்கும் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் புதிய ரயில், விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்ட மிடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது: நீண்ட தூரம் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இதைத் தொடர்ந்து 50 ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட திட்டம் மேற்கொள்ளப்பட்டு, வரும் நிதியாண்டில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான பட்டியலை பல்வேறு ரயில்வே மண்டலங்களும் வாரியத்திடம் அளித்து வருகின்றன. 16 பெட்டிகள், 20 பெட்டிகள், 24 பெட்டிகள் என 3 வகையான ரயில்கள் தயாரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் மெக்கானிக்கல் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டுவிடும். மின்னணு பணி முடிவடைய சற்றுக் காலம் எடுக்கும். எனவே, இரண்டு முதல் 3 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, வந்தே பாரத் வகை ரயில்களை, ரயில்வேயின் இதர தொழிற்சாலைகளிலும் தயாரிப்பதற்கான கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் உற்பத்தி விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு

அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 விழக்காடு மின் தேவை அதிகரித்து வருகிறது. அதன்படி, அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனது சொந்த உற்பத்தியை தவிர, மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வரப்படுகிறது. எனினும், சொந்த உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் ஏற்கெனவே கடந்த 2014 ஆம் ஆண்டு செயல்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் பணியை தாமதமாக மேற்கொண்டதால் 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், எஞ்சிய பணியை மேற்கொள்ள 2022-ம் ஆண்டு மற்றொரு நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் பணியை தாமதமாக மேற்கொண்டதால், கடந்த ஆண்டு இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் உற்பத்தி விரிவாக்க திட்டத்தை மின்வாரியமே செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதும், அடுத்தக் கட்டமாக பணிகள் தொடங்கப்படும். மின்வாரியம் தற்போது சொந்தமாக 4,320 மெகாவாட் அனல் மின் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி நிலையத்தை கொண்டுள்ளது”, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.