tamilnadu

img

மின்கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

சென்னை:
ஊரடங்கு காலத்தின் போது,  முந்தைய மாத மின் கட்டண தொகையின் அடிப்படையில் புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப் பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.இந்த உத்தரவை ரத்து செய்து,  தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்ட போது, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப் படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊரடங்க காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 18 முதல் 20 மணி நேரங்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தியதாலும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.ஊரடங்கில் மின்சார ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்யாததால், ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில் புதனன்று (ஜூலை 15) தீர்ப்பளித்த நீதிபதிகள், ஊரடங்கு நேரத்தில் மின்கட்டணம் தொடர்பாக தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருப்பின் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் என அறிவுறுத்தி, ஊரடங்கில் மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;