சென்னை:
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை அலட்சியமாக புறந்தள்ளி, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி இந்திய அரசியல் சாசனம் வகுத்துள்ள ஜனநாயகக் கோட்பாட்டை சிதறடித்துள்ள மத்திய பாஜக அரசின் செயலை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநாடு கண்டித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் “அரசியல் சாசனத்தை காப்போம் “ “மதச்சார்பற்ற குடியரசை நிலைநிறுத்துவோம்” என்ற தலைப்புகளில் இணையதள வழி மாநாடுநடைபெற்றது. இம் மாநாட்டில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி .கோபால் கவுடா, இந்து நாளிதழ் என். ராம் , வழக்கறிஞர் ஏ. அருள்மொழி, முனைவர் வசந்திதேவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., டிகேஎஸ். இளங்கோவன் எம்பி., தி.செந்தில் வேல், பிஷப் தேவசகாயம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி னர்.இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவால் முன் மொழியப்பட்டு, அரசியல் நிர்ணயசபையால் ஏற்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் காலத்திற்கேற்ற மாண்புகளைக் கொண்டுள்ளது.
வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை எனும் அடிப்படையில் எழும் நாடாளுமன்றமே மக்களுக்கான சட்டங்களை தனது விதிமுறைகளுக்கு ஏற்ப இயற்ற வேண்டியது. அதற்கு முன்னதாக இரு அவைகளிலும் பயனுள்ள விவாதம் நடப்பதும், அதற்குப் பிறகு முறையான வாக்கெடுப்பின் மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதும் இயல்பான ஒன்று. ஆனால் மத்தியில் தற்போதுள்ள பாஜக அரசு இந்த மாண்பைக் கடைப்பிடிப்பதில்லை. விவசாயிகளுக்கு பெருங்கேடு பயக்கும், விவசாயத்தை பெரும்கார்ப்பரேட் கைகளில் ஒப்படைக்கும் மூன்று மசோதாக்கள் வெறும் குரல் எழுப்பல் மூலமே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன; எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பு கேட்டும் அது நடத்தப்படவில்லை. இதன் பொருள், சபையில் ஒரு மசோதாவுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை யென்றாலும் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கலாம் என்பது! இது அரசியல்சாசனம் வகுத்துள்ள ஜனநாயகக் கோட்பாட்டை சிதறடிக்கும் செயல் என்று இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்காலத்தில் இப்படி நடக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது.
மும்மொழித்திட்டம் என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பிற்கும் வழி வகுக்கப்படுகிறது.நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கூறாகிய மாநில உரிமையைக் காக்க மாநிலப்பட்டியலில் இருந்து பறிக்கப்பட்ட கல்வி போன்ற அதிகாரங்கள் மீண்டும் அந்தப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.அரசமைப்பின் நான்காவது தூண் ஊடகம். அச்சு ஊடகங்களோடு காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இன்று நமது வாழ்வில் அதி முக்கியமான பங்கைச் செலுத்துகின்றன. இவற்றின் சுதந்திரம் காக்கப்பட்டால்தான் அரசு பற்றிய மெய்யான விமர்சனங்கள் வெளிப்படும். தற்போதய மத்திய ஆட்சியில் அது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எல்லை மீறிச் சென்றிருக்கிறது. விளம்பர நிதி மற்றும் மிரட்டல் எனும் இரட்டை ஆயுதம் படுவேகமாகப் பாய்ச்சப்படுகிறது. தமிழக தொலைக்காட்சி ஒன்றின் தலைமை நிர்வாகி உள்ளிட்ட நெறியாளர்கள் மீது குறிவைத்து சங் பரிவாரங்கள் தாக்கியதும் அதன் உடனடி விளைவாக அவர்கள் எல்லாம் அதிலிருந்து வெளியேற வேண்டி வந்ததும் நிலைமையின் விபரீதத்தை துல்லியமாகக் காட்டுகின்றன. சங்கிகளின் இந்தப் பயமுறுத்தலை மாநாடுவன்மையாகக் கண்டிப்பதோடு, இதனால் பாதிப்புக்குள்ளாகி யிருக்கும் ஊடகக்காரர்களுடன் தனது ஒருங்கிணைப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.
மதச்சார்பற்ற குடியரசை நிலைநிறுத்த பாடுபடுவோம்
நமது அரசியல் சாசனத்தின் முகவுரை “மதச்சார்பற்ற குடியரசு” என்று இந்திய அரசை பிரகடனப்படுத்தியுள்ளது. இன்றோ, அரசு என்பது இந்து மத விவகாரங்களைக் கவனிக்கும் அரசாகவே இருக்கும், செக்யூலரிசம் என்பதற்கு இந்தியாவில் அதுதான் அர்த்தம் என அதிகாரத்தில் இருப்போர் சொல்லும் நிலை வந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் நாட்டின் பிரதமரே பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில்கட்டும் வேலைக்கு அடிக்கல் நாட்டியது. இது தேசப்பிதா காந்தி, முதல் பிரதமர் நேரு ஆகியோர் பின்பற்றிய மதச்சார்பற்ற அரசு மற்றும் அரசியலுக்கும், அரசியல் சாசன மாண்பிற்கும் நேர்விரோதமாகும். எனவே பாஜக அரசின் இந்தப் போக்கை மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, இதை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
வேதமதச் சார்பு கொண்ட புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், அரசு கல்விக்கூடங்கள் மதச்சார்பற்ற முறையில் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.ஆரிய நாகரிகமாகிய வேத நாகரிகம் மட்டுமே இந்தியாவின் ஒரே நாகரிகம் என இட்டுக்கட்டவே இந்திய பண்பாட்டின் தோற்றம்மற்றும் பரிணாமம் பற்றிய ஆய்வுக்கு மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இது இந்திய பண்பாட்டின் பன்மைத் தன்மையை நிராகரித்து, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையாக இருப்பதால் இந்தக் குழுவைக் கலைக்க வேண்டும்.
பாபர் மசூதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்க!
பாபர் மசூதி இடிப்பு குறித்த தீர்ப்பில், நீதி குடை சாய்ந்திருக்கிறது. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றிய சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பில் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான கொடுஞ்செயல், கிரிமினல் நடவடிக்கை என்று கடுமையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றவாளிகள் அனைவரும் இப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது அந்தத் தீர்ப்பின் உணர்வுக்கு முற்றிலும் விரோதமாக இருக்கிறது. இது நமது நீதிமன்ற முறைமை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளது.இந்த அநீதி தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்கை முறையாக நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்துகிறது.