tamilnadu

img

துணைவேந்தர் சூரப்பாவை நீக்கக்கோரி எஸ்எப்ஐ இன்று போராட்டம்

சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக்கூடாது; துணைவேந்தர் சூரப்பாவை பதவியிலிருந்து நீக்கம் வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று (அக்டோபர் 16) மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன்,மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகச்சிறந்த  ஆளுமைகளையும் வல்லுநர்களையும் உருவாக்கிய பெருமை கொண்டதாகும். இன்றைக்கும் தமிழகத்தின்  ஏழை எளிய, நடுத்தர மாணவர்களை பொறியாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உருவாக்கி வருகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு தனது ஆர்எஸ்எஸ் அஜண்டாக்களை நிறைவேற்றுவதற்காக பணியமர்த்தப்பட்ட துணைவேந்தர் சூரப்பா மூலம் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதோடு மட்டுமல்லாமல் பெயரையும் மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில உரிமைகளை பறித்து, இட ஒதுக்கீட்டை அழிப்பதன் மூலம் தமிழகத்தின் வளமான சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் வேலைகளை செய்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழகத்தின் கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தான்தோன்றித்தனமாக செயல்பட்டுள்ளார்.  

தமிழக அதிமுக அரசோ எதையும் கண்டுகொள்ளமல் பதவி ஆசையில் அனைத்தையும் வேடிக்கை பார்த்து வருகிறது. ஆனால் தமிழக மாணவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். 
அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாத்திடவும், துணைவேந்தர் சூரப்பாவை பதவியிலிருந்து நீக்கிடக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் இன்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.