சென்னை:
போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பண்ருட்டி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரித்து, 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகே வடக்குத்து பகுதியைச்சேர்ந்தவர் செல்வமுருகன் என்பவரை கடந்த 28 ஆம் தேதி திருட்டுவழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நெய்வேலி காவல்துறையினர், அவரைக் கைது செய்து விருத்தாச்சலம் சிறையில் அடைத்தனர்.
நவம்பர் 2 அன்று செல்வமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறைக்காவலர்கள் அவரை விருத்தாசலம் அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கபட்டது. இதனனத்தொடர்ந்து காவல்துறையினர் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகார் தெரிவித்து, மறியலில் ஈடுபட்டனா். பண்ருட்டி வட்டாட்சியா் ஆா்.பிரகாஷ், டிஎஸ்பி பாபு பிரசாத்,
காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் மலா்விழி ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினா். அப்போது, செல்வமுருகன் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீடுவழங்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தினா்.இந்நிலையில் வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன்விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் மத்திய சிறைகண்காணிப்பாளர் கடிதத்தின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று புலன் விசாரணைபிரிவுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.