tamilnadu

ஆசிரிய பெருமக்களே ! உங்களைத்தான்...

சு.பொ.அகத்தியலிங்கம்

அண்மையில் ராசிபுரம் சென்றிருந்தேன். காலை நடை பயிற்சியின் போது (12/2/2023) ஓர் வித்தியாலம் பள்ளியின் வாசலில் ஓர் தகவல் பலகையில் எழுதப்பட்டிருந்த செய்தியை வாசித்தேன். ராஷ்டிரிய ஸ்திரி சேவக்” (ஆர்எஸ்எஸ்) பெண் தொண்டர்களுக்கு ஓர் நாள் “பண்பாட்டு ஒழுக்க பயிற்சி” நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் நிறையச் செய்திகளை நாம் அறிய வேண்டும். ஆர்எஸ்எஸ் என்பது  “ராஷ்டிரிய சுயம் சேவக்” எனப்படும் ஓர் பாசிச அமைப்பு. இதில் ஆண்கள் மட்டுமே சேர முடியும்.  பெண்கள் சேரவே முடியாது. ஏனெனில் ஆர்எஸ்எஸ் நச்சு சித்தாந்தப்படி ஆண்களுக்கு மட்டுமே சுயம் உண்டு.பெண்களுக்கு சுயம் கிடையாது.  ஆண்களுக்கு கீழடங்கியவர்களே பெண்கள் என்கிற சனாதன பஞ்சாங்க நாற்றமெடுக்கும் பார்வையையே ஆர்எஸ்எஸ் கொண்டுள்ளது. சுயம் நீக்கிய அல்லது சுயம் இல்லாத  ‘ராஷ்டிரிய ஸ்திரி சேவக்’ என்பது ஆர்எஸ்எஸ் என அழைக்கப்பட்டாலும் சுயம் உள்ள ஆண் ஆர்எஸ்எஸ் சின் துணை அமைப்பே இந்த பெண் ஆர்எஸ்எஸ். பெண்ணடிமைத்தனமே இவர்களின் பண்பாட்டு ஒழுக்கம். இதற்கும் வெறுப்பு அரசியலுக்குமே இவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். இதனை எத்தனை பேர் சரியாக புரிந்து இருக்கிறோம்? பள்ளிகளில் கல்வி நிலையங்களில் மதவெறி சாதிவெறி சனாதன விஷப் பயிற்சி பகிரங்கமாகவே நடக்கிறது. தமிழ்நாட்டின் கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒரு காலத்தில் பள்ளிக்கூடங்கள் விடுதலைப் போராட்டக் களங்களாக இருந்தன. ஆசிரியர்கள் மாணவர்களை விடுதலைப் போருக்கு உந்தும் வழிகாட்டிகளாக சித்தாந்த ஒளி விளக்காக இருந்தனர். இடதுசாரி தத்துவத்தை மாணவப் பருவத்தில் விதைத்ததிலும் ஆசிரியர்கள் பங்கு பெரிதாக இருந்தது. திராவிட இயக்கம் ஓங்கி உயர பள்ளிக் கூடங்களே பாசறைகளாக இருந்தன.ஆசிரியர்களே முன்நின்று வழிகாட்டினர். பின்னர் மாணவர்களுக்கு ஏன் அரசியல்? கல்வி மட்டுமே போதும். இப்படி அரசியல் நீக்கம் வேகமாக அரங்கேறியது. இப்போது பள்ளிக்கூடங்கள் ,கல்வி நிலையங்களில் மதவெறியும் வெறுப்பு அரசியலும் நிரம்பிய விஷக்கொடுக்குகளான ஆர்எஸ்எஸ் புழங்கும் இடமாகிக் கொண்டிருக்கின்றன. கண்டும் காணாமல் ஒதுங்குவது சூழும் பேரபாயத்தை, பாசிசத்தை புரிந்து கொள்ளாத ஏமாளித்தனம். அரசு ஊழியர்களே என்று விளிப்போம். ஆசிரியர்களை மட்டும்தான் ஆசிரியப் பெருமக்களே என்று அழைப்போம். பெருமைக்குரிய ஆசிரிய பெருமக்களே! அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களே! •    உங்களில் எத்தனை பேர் கொரோனா காலத்தில் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு பாடம் செல்லிக் கொடுத்தீர்கள்? •    இப்போதும் உங்களில் எத்தனை பேர் உங்கள் தெருப் பிள்ளைகளின் /கிராமத்து பிள்ளைகளின் கல்வியில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள் ? •    உங்களில் எத்தனை பேருடைய வாய் உங்கள் பொருளாதார கோரிக்கைகளுக்கு வெளியே உரக்கப் பேசி இருக்கிறது? •    உங்களில் எத்தனை பேருடைய கரங்கள் தான் வாழும் சமூகத்திற்காக பகுத்தறிவுக்காக உயர்ந்துள்ளது ?  ஆசிரிய பெருமக்களே! உங்களின் கனத்த மவுனமும் செயலின்மையும் பாசிசப் பேரிருளை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவே உதவும். ராசிபுரம் ஓர் தகவல் ஓர் எச்சரிக்கையே!