தமிழகத்திற்கென கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழகத்திற்கென கல்விக்கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள், வல்லுனர்களை கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
2021-22 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கென்று கல்விக் கொள்கையை உருவாக்க உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அது தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது.
ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, புதிய தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் கபளீகரம் செய்ய முயல்வதோடு கல்வித்துறையில் ஒன்றியமயம் - காவிமயம் - கார்ப்பரேட் மயமாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக துவக்கக் கல்வி துவங்கி, உயர்கல்வி வரை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதோடு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிற்போக்கு கருத்தியலை திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியுமாகும். இந்நிலையில் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கென்று கல்விக் கொள்கை உருவாக்க தமிழக அரசு எடுத்துள்ள முன்னெடுப்பு பாராட்டத்தக்கது.
இந்தக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் கல்வித்துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார்ந்த வல்லுநர்கள் மட்டுமின்றி, மக்கள் கல்வி மற்றும் அறிவியல், அறிவொளி இயக்கங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்கள் என்பதும் நம்பிக்கையளிக்கிறது. கல்வித்துறையை ஜனநாயகப்படுத்தவும், தமிழகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தின் வழி நின்று பாடத்திட்டத்தை உருவாக்கவும், அறிவியல் பூர்வக் கல்வியை உறுதிப்படுத்தவும், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்டு இந்தக்குழு தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நம்புகிறது.