tamilnadu

img

தோழர் எஸ்.ஏ.பெருமாள் அகவை 80 நிறைவு!

சென்னை, பிப். 13 - அகவை 80-ஐ நிறைவு செய்த தோழர் எஸ்.ஏ. பெருமாளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் விடுத்துள்ள  வாழ்த்துச் செய்தி வருமாறு: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்கள் 80 வயதை நிறைவு செய்துள்ளார்.

அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருபவர் தோழர் எஸ்.ஏ.பி. ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர், தொழிற் சங்கத் தலைவர், ‘தீக்கதிர்’ பொது மேலாளர், ‘செம்மலர்’ ஆசிரியர் எனப் பல கட்சிப் பொறுப்புகளில் இருந்து திறம்பட செயல்பட்டவர். தற்பொழுது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

கட்சிக் கல்வி வகுப்புகளில் ஆசிரியராக- பல நூல்களின் படைப்பாளியாக- சிறந்த எழுத்தாளராக- த.மு.எ.க.ச.வின் துவக்க காலத்தில் இருந்து இன்று வரை முக்கிய நிர்வாகியாக செயலாற்றி வருபவர் தோழர் எஸ்.ஏ.பி.  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவர்களான தோழர் பி. ராமமூர்த்தி, ஏ. பாலசுப்பிரமணியம், ஜீவா, ஏ. நல்லசிவன், என். சங்கரய்யா, என். வரதராசன், ஆர். நல்லக்கண்ணு உள்ளிட்ட பல தலைவர்களோடு மிக நெருக்கமாக பழகி அவர்களது வழிகாட்டுதலோடு பணியாற்றி யவர் என்ற பெருமை படைத்தவர்.

தோழர் எஸ்.ஏ.பி. 80 வயதை நிறைவு செய்யும் வேளையில் அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து மார்க்சிய இயக்கத்திற்கும், மக்களுக்கும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துகிறேன்”. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.